70,000 பாடல்கள் பாடியிருக்கிறேன்: பி.சுசீலா

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தீபாவளி சிறப்பு மலர் வெளியிட்டு விழா, சென்னையில் நடந்தது. இதில், பாடகி பி.சுசீலா, தயாரிப்பாளர் எஸ்.தாணு, இயக்குநர் ஜெயம் ராஜா, நடிகர் சதீஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ‘போண்டா’ மணி கலந்து கொண்டனர். விழாவை நடிகர் டேனி தொகுத்து வழங்கினார்.
அப்போது, பாடகி பி.சுசீலா பேசும்போது, ‘‘நான் 70 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறேன். காலையில் 7 மணிக்கு ரெக்கார்டிங் ஆரம்பித்தால், போய்க்கொண்டே இருக்கும். எனக்கு பாடும் போது தெலுங்கு வாடை வராது. பேசும்போது வரும். எப்படி என்று தெரியாது. அது கடவுள் கொடுத்த வரம். என் அப்பாவுக்கு நான் பெரிய பாடகியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது.
அதை நிறைவேற்றி இருக்கிறேன். தலைமுறைகள் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் சங்கீதம் மாறவில்லை” என்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் திரும்பியுள்ள நடிகர் ‘போண்டா’ மணிக்கு சங்கத்தின் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.

Related posts