லைகர் தோல்வியால் ஏமாற்றம் – நடிகை சார்மி கவலை

லைகர்’ தோல்வியால், தான் ஏமாற்றம் அடைந்ததாக நடிகை சார்மி தெரிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே உட்பட பலர் நடித்த படம், ‘லைகர்’. புரி ஜெகநாத் இயக்கிய இந்தப் படத்தை நடிகை சார்மியும் இணைந்து தயாரித்துள்ளார். பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்தப் படம் தோல்வி அடைந்திருப்பதால், கவலை அடைந்துள்ள சார்மி கூறியிருப்பதாவது:
ரசிகர்கள், வீட்டில் இருந்தவாறே நல்ல கதைகள் கொண்ட படங்களையும் பெரிய பட்ஜெட் படங்களையும் ஒரே கிளிக்கில் பார்க்கும் நிலை இருக்கிறது. அவர்களை உற்சாகப்படுத்தும் படங்கள் வந்தால்தான் தியேட்டருக்கு வருவார்கள். தெலுங்கில் ஆகஸ்ட்டில் வெளியான ‘பிம்பிசாரா’, ‘சீதா ராமம்’, ‘கார்த்திகேயா 2’ படங்கள் ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றன. இந்தப் படங்கள் ரூ.150 கோடியில் இருந்து ரூ.175 கோடி வரை வசூலித்துள்ளன. தென்னிந்தியாவில் முன்பை போல இப்போதும் சினிமா மோகம் இருப்பதாகத் தெரியவில்லை. இது பயங்கரமான மனச்சோர்வை தரும் சூழ்நிலைதான். பாலிவுட்டின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. கரோனாவால் இந்தப் படத்தை உருவாக்க 3 வருடம் ஆகிவிட்டது. பல கஷ்டங்களுக்குப் பிறகே படத்தைத் தயாரித்தோம். விளைவு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. இவ்வாறு சார்மி தெரிவித்துள்ளார்.

Related posts