4 புதிய மந்திரிகளை நியமித்தார் அதிபர் கோத்தபய

இலங்கையின் சுதந்திர வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டை பதம் பார்த்துள்ளது. இதனால் ஆளும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது.

ஒரு மாதத்துக்கும் மேலாக அமைதியாக நடந்து வந்த இந்த போராட்டத்தில் கடந்த 9-ந்தேதி வன்முறை மூண்டதால் 9 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். ஆனாலும் நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வந்தது.

மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை எடுத்தார். இது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் அடுத்தடுத்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் (வயது 73) பிரதமர் பதவியை ஒப்படைத்தார். அவரும் நாட்டின் 26-வது பிரதமராக நேற்று முன்தினம் மாலையில் பதவியேற்றுக் கொண்டார்.ஐக்கிய தேசிய கட்சி சார்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரே எம்.பி.யாக பதவி வகித்து வரும் ரணில் விக்ரமசிங்கே, 6-வது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளார்.அவர் நேற்று தனது அலுவலகத்தில் பணிகளை தொடங்கினார்.

இந்த நிலையில், இலங்கையில் 4 புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார். மந்திரிகளாக நியமிக்கப்பட்ட ஜி.எல் பெரிஸ், தினேஷ் குணவர்த்தனே, பிரசன்ன ரணதுங்கே, காஞ்சனா விஜசேகர ஆகியோர் அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.
புதிய மந்திரிகளாக நியமிக்கப்பட்டவர்களின் துறை விவரம்

தினேஷ் குணவர்தனெ- பொது நிர்வாகம்
ஜி.எல் பெரிஸ்- வெளியுறவுத்துறை
பிரசன்னா ரணதுங்கா- நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி
காஞ்சனா விஜேசேகர- மின்சாரம் மற்றும் எரிசக்தி

Related posts