தியேட்டர்களில் மீண்டும் ‘புஷ்பா’

இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் படங்கள் எதுவும் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால் ‘புஷ்பா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்தனர். சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படம் வெளியாகி இரண்டே நாட்களில், உலக அளவிலான பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.100 கோடி வசூலைக் குவித்தது. கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து ‘புஷ்பா’ முதல் நாளில் ரூ.45 கோடி வசூலித்தது. படம் வெளியாகி 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த ‘வலிமை’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் தள்ளிவைக்கப்பட்டதால் ‘நாய் சேகர்’, ‘என்ன சொல்ல போகிறாய், ‘தேள்’ உள்ளிட்ட மீடியம் பட்ஜெட் படங்கள் திரையரங்கில் வெளியாகின. எனினும் இதில் எந்தப் படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், நேற்று (ஜன. 21) முதல் ‘புஷ்பா’ திரைப்படம் தமிழகத்தில் உள்ள 50 அதிகமான திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அமேசான் ப்ரைம் தளத்தில் ‘புஷ்பா’ படம் வெளியான நிலையில் தற்போது மீண்டும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts