ஆர்ஆர்ஆர் – மேடையில் உறுதியளித்த உதயநிதி ஸ்டாலின்

சென்னை சத்யம் திரையரங்கில் உள்ள 6 திரைகளில் 5 திரையில் ஆர்ஆர்ஆர் வெளியாகும் என உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.

பாகுபலி படத்தை இயக்கி இந்தியா முழுவதும் பிரபலமடைந்த இயக்குநர் ராஜமவுலி. அவர் தற்போது ஆர்ஆர்ஆர் (ரத்தம், ரணம், ரௌத்ரம்) என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு கீரவாணி (மரகதமணி) இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே பாகுபலி படத்துக்கு வசனம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தின் மூன்று பாடல்களும், டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் விளம்பர விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினர், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இரண்டு வருடங்களுக்கு பிறகு சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். அதற்கு காரணம் ராஜமவுலி மட்டும்தான். அவரது பெரிய ரசிகன் நான். இந்தப் படம் பாகுபலியின் சாதனையை முறியடிக்கும் என ராஜமவுலியிடம் சொன்னேன்.

எனக்கு நடனம் வராது. சிலருக்கு நடனம் ஆடினால்தான் கழுத்து சுளுக்கும். இவர்கள் ஆடுவதை பார்த்தாலே எனக்கு கழுத்து சுளுக்கிக்கொண்டது. எனக்கு நடனம் சுத்தமாக வராது.

இந்தப் படத்திற்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. 10 வருடங்கள் முன்னர் மஹதீரா படத்தை டப் செய்து தமிழில் வெளியிட்டோம். அப்போது சத்யம் திரையரங்கில் அப்படத்தை வெளியிட வேண்டும் என ராஜமவுலி கேட்டுக்கொண்டார்.

இப்போது ஆர்ஆர்ஆர் படத்தை மூன்று ஏரியாக்களில் ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது. எப்படியும் சத்யம் திரையரங்கின் 6 திரைகளில் 5 திரைகளில் இந்தப் படத்தைத்தான் போடுவோம். இந்தப் படம் தென்னிந்தியாவின் ஒரு மைல் கல்லாக இருக்கும்” என்று கூறினார்.

படவிழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “ஆர்ஆர்ஆர்,வலிமை ரிலீஸ் என 2022-ம் ஆண்டு சிறப்பாக தொடங்க இருக்கிறது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் திரையில் இருவரும் இரண்டு சிங்கம், இரண்டு புலிகளை போல் இருந்தனர்” என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பேசிய படத்தின் நாயகன் ஜூனியர் என்.டி.ஆர்,”கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, தன்னடக்கம் நிறைந்தவர் சிவகார்த்திகேயன் எனவும் தமிழில் பாலச்சந்தர் செய்ததை தெலுங்கில் ராஜமவுலி செய்திருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

Related posts