வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்தி

வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம். இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் என, நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (17) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறிமாவோ பண்டாரநாயக்கா காலப்பகுதியிலிருந்து இலங்கையானது சீனாவுடனும், இந்தியாவுடனும் நெருக்கமான தொடர்புகளை பேணுகின்றது. அவருடைய காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட போது எமது நாடு நடுநிலையாக செயற்பட்டிருந்தது. தற்போதும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் முரண்பாடு நிலை காணப்படுகின்றது. அதனை நாம் ஜனாதிபதியுடன் பேசியே முடிவுகளை எடுத்து வருகின்றோம்.

நாம் எந்த நாடுகளுக்கும் எமது பகுதிகளை விற்கவில்லை. எந்த நாட்டுக்கும் சார்பாக செயற்படவுமில்லை. இயற்கையான பகுதிகளில் அபிவிருத்தி செய்வதற்கு நாம் சில பகுதிகளை வழங்குகின்றோம். இதனால் எமது மக்களுக்கும் நன்மைகள் ஏற்படும். வடக்கில் இந்தியாவும், சீனாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம். இதனால் வட பகுதி மக்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும்.

கேஸ் சிலிண்டர் பிரச்சினை தொடர்பில் நாம் பேசியிருக்கின்றோம். தேவையான கேஸ் சிலிண்டர்கள் இருக்கின்ற போதும் அதில் பிரச்சினைகள் உள்ளன. அதனை பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பானதாக மக்களுக்கு வழங்க அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கை எடுப்போம்.

யுகதனவி ஒப்பந்த விவகாரம் தொடர்பில் நாம் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். அதற்கு நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கவுள்ளது. நாம் கூறியது போன்றே அது வரும் என நம்புகின்றோம். இந்த விடயத்தில் இரண்டு, மூன்று அணிகளாக செயற்படுவதைப் பார்க்கின்றோம். இருப்பினும் அரசாங்கம் என்ற வகையில் அது தொடர்பில் நாம் மீண்டும் கலந்துரையாடவுள்ளோம் எனத் தெரிவித்தார்.

Related posts