மனித உரிமையும், ஊடக சுதந்திரமும்

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியமும், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியமும், இணைந்து நடாத்திய மனித உரிமையும், ஊடக சுதந்திரமும் எனும் தொனிப் பொருளின் கீழான நிகழ்வு நேற்று(12) மாலை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் இ.தேவஅதிரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் ஊடகவிலாளர்கள், மற்றும் கொழும்பிலிருந்து வருகை தந்த தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சிங்கள ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.இதன் முதல் நிகழ்வாக பி.ப 02.00 மணிக்கு இணைய தொழில்சார் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பெடி கமகே அவர்களினால் இணைய வழி ஊடகவியலாளர்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும், ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.

பின்னர் மாலை 4 மணிக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மற்றும் ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைத்ததாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இதன்போது மனித உரிமைகள் தொடர்பாக, திறந்த பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளர் திருமதி ராதா ஞானரெட்னம் அவர்களும், மனித உரிமையும் முஸ்லிம் சமூகமும், எனும் தலைப்பிலும், ஓய்வு பெற்ற ஆசிரியரும், முன்னாள் ஊடகவியலாளருமான முகமட் இஸ்மயில் பாறுக் அவர்களும், பெண் உரிமை தொடர்பில் திருமதி சேதிஸ்வரி யோகதாஸ் அவர்களும், மனித உரிமை தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய முன்னாள் இணைப்பாளர் இ.மனோகரன் அவர்களும், மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் இ.பாக்கியராசா ஆகியோரும் கருத்துக்களை வழங்கினர்.பின்னர் மாலை 6.00 மணியளவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், ஊடகவியலாளர்களின் சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும், எனவும் தெரிவித்து, மட்டக்களப்பு காந்திப்பூங்கா முன்னிலையில் மெழுகுவர்த்தி ஏந்தி, சுடர் ஏற்றி நினைவு கூர்ந்ததுடன் நிகழ்வு நிறைவுற்றது.

Related posts