அசாத் சாலி 8 மாதங்களுக்கு பின் நிரபராதி என விடுதலை

கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று (02) எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இத்தீர்ப்பை வழங்கினார்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இனங்கள் அல்லது மதங்களின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், மக்கள் மத்தியில் கோபத்தை தூண்டும் வகையிலும் இதுபோன்ற கருத்துகளை பிரதிவாதி கூறியதாக முறைப்பாட்டாளர்களால் நிரூபிக்க தவறியமை காரணமாக, பிரதிவாதியாக நிரபராதியென விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த மார்ச் 09ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தின் ஊடாக, இனங்களுக்கு இடையில் பகைமையை தூண்டியதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தை மீறியதாகவும் தெரிவித்து, இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts