ஒரே குடும்பம் அதிகாரத்தை ஏகபோகமாக அனுபவிக்கக்கூடாது

இந்தியாவில் பல கட்சிகள் வாரிசு அரசியல் செய்கிறன, இது நமது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது, அத்தகைய கட்சிகள் அவர்களின் குடும்பத்திற்காக மட்டுமே செயல்படுகின்றன, ஒரே குடும்பத்தினர் மட்டும் அதிகாரத்தை ஏகபோகமாக அனுபவிக்கக்கூடாது என பிரதமர் மோடி பேசினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட நாளாக கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து நவம்பர் 26ம் தேதியை அரசியலமைப்புச்சட்ட நாளாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது.
இதையொட்டி நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் இன்று காலை நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயாடு, பிரதமர் மோடி,மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நமக்கு வழங்குவதற்காக, பலத்த ஆலோசனைக்கு பிறகு உருவாக்கிய தலைவர்களுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டிய நாளாக அரசியலமைப்பு தினம் உள்ளது. இன்றைய நாள் நாடாளுமன்றத்தை வணங்க வேண்டிய நாள். இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தி மற்றும் சுதந்திர போராட்ட தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்து கொள்கிறேன். அரசியல் சாசனத்தை ஏற்படுத்தியவர்களுக்கு நாடே முதன்மையாக இருந்தது.
1950-க்கு பிறகு அரசியல்சாசன தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், சிலர் அதனை செய்யவில்லை. நாம் செய்வது சரியா அல்லது இல்லையா என்பதை மதிப்பிட இந்த நாள் கொண்டாட வேண்டும். அரசியல் சாசனம் என்ற பெயரில் நமக்கு மிகப்பெரிய பரிசை அம்பேத்கர் வழங்கி உள்ளார். ஜனநாயக நாட்டில் அரசியல் குழுக்கள் மிகவும் முக்கியம்.இந்தியாவில் பல கட்சிகள் வாரிசு அரசியல் செய்கின்றன. . வாரிசு அரசியல் நமது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அத்தகைய கட்சிகள், அவர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்திற்காக மட்டுமே செயல்படுகின்றன.கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் ஒரே குடும்பத்திடம் இருந்தால் அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஒரே குடும்பத்தினர் மட்டும் அதிகாரத்தை ஏகபோகமாக அனுபவிக்கக்கூடாது.
உட்கட்சி ஜனநாயகத்தை, மதிக்காத கட்சிகள், நாட்டின் ஜனநாயகத்தை எப்படி பாதுகாக்கும். திறமைகள் அடிப்படையில் தலைவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். வாரிசு அரசியல் செய்யும் சில கட்சிகள் தங்களது மதிப்பீடுகளை இழந்துவிட்டன.
அரசியல் கட்சிகள் அரசியலமைப்பு சட்டங்களை புரிந்து செயல்பட வேண்டும். ஊழல் தண்டனை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபட கூடாது. ஊழல் செய்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
இன்று மக்கள் தங்களது உரிமைகளை பற்றி பேசுகின்றனர். மக்கள் தங்களது கடமைகளை புரிந்து கொண்டால், அவர்களது உரிமை பாதுகாக்கப்படும். நமது அரசியலமைப்பை எதிர்கால தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நாளில் தான், தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய துக்க நாள். தீவிரவாதிகளுடன் போரிட்டு தங்கள் உயிரை நீத்த தைரியமிக்க நமது வீரர்களை நினைவு கூறுகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related posts