மோடி வலிமையடைய காங்கிரஸ் தான் காரணம் மம்தா

கோவாவில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறிய வாய்ப்புண்டு. ஆனால், பா.ஜ.க. எங்கும் போகாது. மக்கள் மோடியைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று ராகுல் காந்தி நினைக்கிறார். அங்குதான் அவருக்குப் பிரச்சினையே இருக்கிறது. ஆனால், அது நடக்காது.

பிரதமர் மோடியின் வலிமை என்ன என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுல் காந்தியால் ஒருபோதும் போட்டியிட முடியாது. அவரைத் தோற்கடிக்கவும் முடியாது என கூறினார்.

இந்த நிலையில் கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“நரேந்திர மோடியை மேலும் மேலும் பலம் மிக்கவராக ஆக்குவதே காங்கிரஸ் கட்சி தான், பா.ஜ.க.வுக்கு விளம்பரம் தேடித் தரும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.

காங்கிரசால் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாததால் நாடு இன்று கஷ்டப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக மோதாமல் என்னுடனும், என் கட்சியை எதிர்த்தும் மோதினர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர்களுக்கு பூச்செண்டு தருவோம்!” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Related posts