பாண் விலையும் நள்ளிரவுடன் ரூ. 5 இனால் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையால் உணவுகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை (12) முதல் சோற்று பார்சல், கொத்து பார்சல், பால் தேநீர், பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை ரூ. 10 இனால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

தேநீரின் விலையை ரூபா 25ஆக தொடர்வதற்கு முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மையல் எரிவாயுவின் விலை மிகப் பாரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், சோற்று பார்சல் ஒன்றின் விலையை குறைந்தபட்சம் ரூ. 30 இனால் அதிகரிக்க வேண்டியுள்ள நிலை காணப்படுவதாகவும், ஆயினும் தற்போதுள்ள மக்கள் உள்ள நிலையைக் கருத்திற் கொண்டு ரூ. 10 இனால் மாத்திரம் அதனை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கட்டுப்பாட்டு விலைகள் நீக்கத்தை தொடர்ந்து, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூ. 10 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (ரூ. 130 – 170 வரை விற்பனை)

எனவே, பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் இவ்வாறு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு இறாத்தல் (450g) பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் ரூ. 5 இனால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இம்முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாணின் விலை அளவைப் பொறுத்து ரூபா 60 தொடக்கம் 100 வரை விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாட்டு விலை நீக்கத்தை தொடர்ந்து, இன்று முதல் 10 ரூபாவினால் கோதுமை மாவின் விலைகளை அதிகரிப்பதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களின் ஒன்றான செரண்டிப் நிறுவனம் அறிவித்திருந்தது.

ப்ரிமா நிறுவனம் இதுவரை கோதுமை மா விலைகள் தொடர்பில் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல் எரிவாயுவின் விலைகளும் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்கத்கது.

இந்நிலையிலேயே ஒரு இறாத்தல் (450g) பாணின் விலையை ரூபா 5 இனால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.

அத்துடன், நாளை (12) முதல் சோற்று பார்சல், கொத்து பார்சல், பால் தேநீர், பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை ரூ. 10 இனால் அதிகரிக்க, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

Related posts