நடன போட்டிகளை வெறுக்கும் சாய்பல்லவி

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார் சாய்பல்லவி. திரைப்படங்களில் அவரது நடன நிகழ்ச்சியை பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
நடன அனுபவங்கள் குறித்து சாய்பல்லவி கூறும்போது, ‘‘நடனம் தெரிந்தவர்கள் போட்டியில் கலந்து கொள்வது, வெற்றி பெற போராடுவது என்றெல்லாம் இருந்தால் மன அழுத்தம் வரும்.
அது நடனத்தின் மீது நமக்கு இருக்கும் ஆர்வத்தையும் கொன்று விடும். நான் முதலில் நடன பயிற்சி எடுத்தது இல்லை. படிக்கிற காலத்தில் எனக்கு நடனம் மீது விருப்பம் இருந்ததால் நானாகவே ஆடி பழகினேன்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்று அரை இறுதிபோட்டி வரை போனேன். இறுதி போட்டியில் தோல்வி அடைந்தேன். ஜெயிக்காமல் தோல்வி அடைந்து விட்டோமே என்று அப்போது கவலைப்பட்டேன்.
இதனால் நடனம் மீது எனக்கு இருந்த ஆர்வம் குறைய ஆரம்பித்தது. அப்போதுதான் எனக்கு புரிந்தது. நமது சந்தோஷத்துக்காக இதை கற்றுக்கொண்டோம். நமக்கு சந்தோஷம் கொடுக்க ஆடுவது நீடிக்க வேண்டும். போட்டிக்கு போகக்கூடாது.
போனால் மகிழ்ச்சி போய்விடும் என்று உணர்ந்தேன்.
நடனத்தின் மீது இருந்த ஆர்வத்தினால் படங்களில் என்னால் நன்றாக நடனம் ஆட முடிந்தது.
அது பெயர் வாங்கி கொடுத்தது. நடன இயக்குனர்கள் மிகவும் பாராட்டினர்.
என்னை விட திறமையான டான்சர்கள் உள்ளனர். எனக்கு வாய்ப்பு வந்ததால் பிரபலமாகி உள்ளேன்” என்றார்.

Related posts