சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா

நாக சைதன்யா – சமந்தா இருவருடைய பிரிவுக்கு ஆமிர் கானைச் சீண்டியுள்ளார் கங்கணா ரணாவத்.
நீண்ட நாட்களாக நாக சைதன்யா – சமந்தா இருவரும் பிரிந்துவிட்டதாக வெளியான செய்திக்கு நேற்று (அக்டோபர் 2) இருவருமே முற்றுப்புள்ளி வைத்தனர். இருவருமே திருமண உறவிலிருந்து பிரிந்துவிட்டோம் என்று கூட்டாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதற்கு சமூக வலைதளத்தில் பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.நாக சைதன்யா தந்தையான நாகார்ஜுனா, இருவருடைய பிரிவு துரதிர்ஷ்டவசமானது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, நாக சைதன்யா – சமந்தா இருவருடைய பிரிவை முன்வைத்து ஆமிர் கானை மறைமுகமாகச் சீண்டியுள்ளார் கங்கணா ரணாவத்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் கங்கணா ரணாவத் கூறியிருப்பதாவது:
“எந்த விவாகரத்திலும் தவறு என்பது ஆண் மீதுதான். நான் பழமைவாதியாகத் தெரியலாம், பாரபட்சமாகப் பேசுவதாக நினைக்கலாம். ஆனால், கடவுள் ஆணையும், பெண்ணையும், அவர்களின் இயல்பை, செயல்பாட்டை அப்படித்தான் படைத்திருக்கிறார். ஆதி காலத்திலிருந்து பார்த்தாலும், விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும், ஆண் வேட்டையாடுபவன், பெண் வளர்த்தெடுப்பவள்.பெண்களை ஆடை போல எளிதில் மாற்றி பின் அவர்களின் உற்ற நண்பர்களாக இருக்கிறோம் என்று பேசும் ஆண்களிடம் கனிவு காட்டுவதை நிறுத்துங்கள். ஊடகங்களிலிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் ஊக்கம் பெறும் இப்படிப்பட்டவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். அவர்களைப் புகழ்ந்து, பெண்ணின் குணத்தைப் பற்றித் தீர்மானிக்கிறார்கள். விவாகரத்து கலாச்சாரம் முன்னெப்போதையும் விட அதிகமாக வளர்ந்து வருகிறது.
சமீபத்தில் தன் மனைவியை விவாகரத்து செய்த தென்னக நடிகர் ஒருவர் 4 வருடங்களாகத் திருமண வாழ்க்கையிலும், 10 வருடங்களுக்கும் மேலாக அந்தப் பெண்ணுடன் காதலிலும் இருந்துள்ளார். இந்த நடிகர் சமீபத்தில், பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என்று அறியப்படும் ஒரு உச்ச நட்சத்திரத்தைச் சந்தித்திருக்கிறார். அந்த நட்சத்திரம் பல பெண்களின், குழந்தைகளின் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டுத் தற்போது பலருக்கு வழிகாட்டுபவராகவும், அறிவுரை சொல்பவராகவும் இருக்கிறார்.எனவே எல்லாம் எளிதாக முடிந்துவிட்டது. இது கிசுகிசு அல்ல. நான் யாரைப் பற்றிப் பேசுகிறேன் என்று நம் அனைவருக்குமே தெரியும்”
இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.

Related posts