பொன்னியின் செல்வன் படக்காட்சிகள் கசிந்தன

கார்த்தியும், திரிஷாவும் நடித்த முக்கிய பாடல் காட்சியும், அவர்கள் தோற்றமும் இணையதளத்தில் கசிந்துள்ளது.

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கொரோனாவால் பல மாதங்கள் முடங்கியது. பின்னர் வேறு படங்களில் நடிக்க சென்ற நடிகர், நடிகைகளை ஒன்று சேர்த்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய நிலையில் குதிரை ஒன்று பலியாகி மணிரத்னம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மத்திய பிரதேசத்தில் நர்மதை நதிக்கரையில் உள்ள சிவாலயம் கோவிலில் திரிஷா செருப்பு அணிந்து நடந்துவரும் புகைப்படம் வெளியாகி எதிர்ப்பை கிளப்பியது. திரிஷா, மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்க இந்து அமைப்புகள் போலீசில் புகார் அளித்துள்ளன.

சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் தோற்றமும், அவர் நடித்த காட்சியும் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இப்போது மீண்டும் கார்த்தியும், திரிஷாவும் நடித்த முக்கிய பாடல் காட்சியும், அவர்கள் தோற்றமும் இணையதளத்தில் கசிந்துள்ளது.

யாரோ திருட்டுத்தனமாக இதனை படம்பிடித்து வெளியிட்டு உள்ளனர். இதனால் அதிர்ச்சியான மணிரத்னம் காட்சிகளை கசிய விட்டவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி உள்ளார். மேலும் படக்காட்சிகள் வெளியாவதை தடுக்க படப்பிடிப்பை சுற்றி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Related posts