அதிகரித்த உணவுப் பஞ்சம் இலங்கையில்..

இலங்கையில் உணவு பொருட்களின் விலையை கட்டுபடுத்தும் நடவடிக்கையாக முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரை அத்யாவசிய சேவைகளின் ஆணையராக இலங்கை அரசு நியமித்தது.

இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. கொரோனா சூழல், நாட்டின் பிரதான வருவாய்த் துறையான சுற்றுலாவின் முடக்கம் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற காரணங்களால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளதால், இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது.

இதனால் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருப்பு குறைவாலும், பதுக்கல் அதிகரிப்பாலும் நாட்டில் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.

இந்நிலையில் உணவுப்பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும் நாட்டில் பொருளாதார அவசர நிலையை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பிறப்பித்துள்ளார். இதன் மூலம், அரிசி, சர்க்கரை போன்ற முக்கிய உணவுப்பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அதிகரித்துவரும் உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அந்நாட்டு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே கொண்டுவந்த அவசர நிலை கட்டுப்பாடுகளுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாக 132 பேரும், எதிராக 51 பேரும் வாக்களித்தனர். அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டால் இலங்கையின் இராணுவ ஆட்சிக்கே அது வழிவகுக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்கட்சியினரும், சமூக செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்த நிலையில் கட்டுப்பாடுகளுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

உணவு பொருட்களின் விலையை கட்டுபடுத்தும் நடவடிக்கையாக முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரை அத்யாவசிய சேவைகளின் ஆணையராக இலங்கை அரசு நியமித்தது. வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் கைவசமிருக்கும் உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அவற்றின் விலையை கட்டுப்படுத்தும் அதிகாரம் அத்யாவசிய சேவைகளின் ஆணையருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Related posts