புதிய இந்தி படத்தில் இணைந்து நடிக்கும் நயன்தாரா, பிரியாமணி

தமிழில் ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி பிரபலமான அட்லி இந்திக்கு சென்றுள்ளார். அங்கு ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இந்த படம் ராணுவ பின்னணியை கொண்ட கதையம்சத்தில் தயாராவதாகவும், படத்துக்கு ஜவான் என்று பெயர் வைக்க முடிவு செய்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவை தேர்வு செய்து உள்ளனர்.

இன்னொரு கதாநாயகியாக பிரியாமணியும், இந்த படத்தில் நடிக்கிறார். ஷாருக்கான் இருவேடங்களில் நடிப்பதாகவும் அதில் ஒருவருக்கு பிரியாமணி ஜோடியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார். சானியா மல்கோத்ரா, சன்னி குரோவர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. படப்பிடிப்பு புனேயில் தொடங்கி உள்ளது.

இதற்காக நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் புனே சென்று இருக்கிறார்கள்.

Related posts