சினிமாவில் நடிக்க தடை நீங்கியது மகிழ்ச்சி- நடிகர் வடிவேல்

இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட பிரச்சினையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த தடையினால் 4 வருடங்களாக படங்களில் அவர் நடிக்கவில்லை.

தற்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டு தடை விலக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வடிவேல் மீண்டும் படங்களில் தீவிரமாக நடிக்க தயாராகி உள்ளார்.

இதுகுறித்து வடிவேல் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு நடிப்பதற்கு விதித்திருந்த தடையை நீக்கியது மகிழ்ச்சி. இது எனக்கு மறுபிறவி, அடுத்து 5 படங்களில் நடிக்க இருக்கிறேன். இந்த மகிழ்ச்சியில் எனக்கு 20 வயது குறைந்து இருக்கிறது. நான் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பது முதலில் சினிமா வாய்ப்பு கிடைத்த உணர்வை தருகிறது.

எனக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு வீட்டில் எனது ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் எனக்கு ரசிகர் மன்றம்தான். ரசிகர்கள் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி.

சுராஜ் இயக்கும் நாய்சேகர் படத்தில் உடனடியாக நடிக்க இருக்கிறேன். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. தொடர்ந்து 2 படங்களில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறேன். பின்னர் படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடிப்பேன்’’ என்றார்.

Related posts