பொருட்களின் விலைகள் உயர்வால் மக்கள் அவதி

பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அத்தியாவசியப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் அல்லது கட்டுப்பாட்டு விலையில் எந்தப் பொருட்களையும் பெற முடியாத சூழ்நிலை மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் காணப்படுகிறது.

ஏழைகளின் உணவுப் பொருட்களாகக் கருதப்படும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் விற்கப்படுகின்றன.

இந்த விவகாரத்தை ஆராய எந்த அரச அதிகாரிகளும் முன் வருவதாக தெரியவில்லை. பொருட்களின் விலை அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்தும்கூட நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மாறுபட்டு கூடிய விலையில் பொருட்கள் யாவும் விற்கப்படுகின்றன.

இதற்கு காரணம் அரச அதிகாரிகளின் அசமந்த போக்கென்றே கூறவேண்டும். மக்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலையே இங்கு காணப்படுகிறது.

எனவே இவ் விடயத்தை கவனத்தில் எடுத்து இந்த மக்களின் அவதி நிலையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related posts