நடிகை மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க கடிதம் ?

நடிகை மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றபிரிவு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் மீரா மிதுன், பேசி வீடியோ வெளியிட்டதால் மத்திய குற்றப்பிரிவினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

வழக்கின் விவரம்:-

திரைப்பட நடிகை மீரா மிதுன், சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை பதிவிட்டாா். அதில் குறிப்பிட்ட ஜாதியினரை அவதூறாக பேசியதோடு, அந்த ஜாதியைச் சேர்ந்த இயக்குநா்கள், நடிகா், நடிகைகளை பற்றி இழிவான கருத்துகளை தெரிவித்திருந்தாா். அவா்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் பேசியிருந்தாா். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

மீரா மிதுனின் இக் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் வன்னி அரசு, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த 7-ஆம் தேதி மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளித்தாா். அதில் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவின் கீழ் இயங்கும் சைபா் குற்றப்பிரிவினா், மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நடிகை மீரா மிதுனுக்கு, சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினார்கள். ஆனால் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாத மீராமிதுன் திடீரென்று தலைமறைவாகி விட்டார். கனவில் கூட என்னை கைது செய்ய முடியாது என்று, போலீசாருக்கு சவால் விட்டு, மீராமிதுன் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்தார்.

இதனால் சைபர் கிரைம் உதவி கமிஷனர் கருணாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மீரா மிதுனை தேடி வந்தனர்.

அவர் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் முதலில் தங்கி இருந்தார். பின்னர் ஆலப்புழா சென்று அங்கு சொகுசு விடுதி ஒன்றில் தனது நண்பருடன் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் கேரளா சென்று ஆலப்புழாவில் வைத்து நேற்றுமுன்தினம் மீரா மிதுனை கைது செய்தனர். அவர் போலீசாருடன் தகராறு செய்தார். ஆலப்புழா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீராமிதுன், கோர்ட்டு அனுமதியுடன் இரு தினங்களுக்கு முன் சென்னை அழைத்து வரப்பட்டார்.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த அவரது நண்பர் ஷாம்அபிஷேக்கும் மீராமிதுனோடு சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று பிற்பகலில் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் மீரா மிதுன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 27-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன் பேரில் மீரா மிதுன் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related posts