சினிமா வாழ்க்கை போராட்டமாக உள்ளது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-

“எனக்கு சினிமா பின்னணி இல்லை. நடிகையான எனது பயணமும் சுலபமாக இல்லை. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். எனது குடும்பம் சென்னை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தது. 8 வயதில் தந்தையை இழந்தேன். படிக்காத எனது அம்மா குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார். அம்மாவுக்கு இந்தி, ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் மும்பை சென்று புடவைகள் வாங்கி வந்து கொஞ்சம் அதிக விலை வைத்து சென்னையில் விற்பனை செய்வார். எனக்கு பெரிய கனவு எதுவும் இல்லை. சினிமாவில் நடிகையாக முயற்சி செய்தபோது எத்தனை தடைகள் வருமோ அத்தனையும் வந்தது. எல்லாவற்றையும் எதிர்கொண்டேன். பாலியல் ரீதியாக எனது உருவம், தோற்றம், முகம், சரும நிறம் போன்றவற்றை வைத்து கொடூரமாக கேலி செய்தார்கள். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேன். எனது முதல் படம் சரியாக ஓடவில்லை. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. இப்போதும் எனது சினிமா வாழ்க்கை போராட்டமாகத்தான் உள்ளது.”

——-

அஜித்குமாரின் ‘வலிமை’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஒரு பைக் துரத்தல் சண்டை காட்சி மட்டுமே பாக்கி உள்ளது. அதை ரஷியாவில் படமாக்க உள்ளனர். ஓரிரு வாரங்களில் முழு படத்தையும் முடித்து அடுத்த மாதம் (செப்டம்பர்) தொடக்கத்தில் இருந்து டப்பிங், கிராபிக்ஸ், இசை கோர்ப்பு போன்ற தொழில்நுட்ப பணிகளை தொடங்குகிறார்கள். இதில் அஜித் ஜோடியாக கியூமா குரோஷி நடிக்கிறார். வினோத் இயக்குகிறார்.

இந்த நிலையில் அஜித் அடுத்த புதிய படத்தில் நடிக்க தயாராவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர் என்றும், புதுச்சேரி, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இது அஜித்துக்கு 61-வது படம். இந்த படத்தையும் வினோத் இயக்க இருப்பதாகவும், போனிகபூர் தயாரிக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மீண்டும் அஜித், வினோத், போனிகபூர் புதிய படத்தில் இணைகின்றனர்.

Related posts