விக்னேஷ் சிவன் குறித்து முதன் முறையாகப் பேசியுள்ளார் நயன்தாரா.

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நீண்ட வருடங்களாகக் காதலித்து வருகிறார்கள். மேலும், ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்தும் வருகிறார்கள். ஆனால், இதுவரை இருவருமே திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.
மேலும், நயன்தாரா தான் நடித்து வரும் படங்களின் எந்தவொரு விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. அவ்வாறு சில படங்களில் கலந்து கொண்டாலும், இதுவரை விக்னேஷ் சிவன் குறித்து எந்தவொரு நிகழ்ச்சியிலும் பேசியதில்லை.
தற்போது விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நெற்றிக்கண்’. இந்தப் படம் ஆகஸ்ட் 14-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இதற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், கையில் அணிந்துள்ள மோதிரம் வைரலானது குறித்துக் கேட்டதற்கு, தனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டதற்கான மோதிரம் என்று குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவனிடம் பிடித்த விஷயங்கள் குறித்த கேள்விக்கு, தனக்கு அனைத்துமே பிடிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிடிக்காத விஷயங்களும் உள்ளன என்று நயன்தாரா கூறுவதோடு இந்த ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது.
இந்த வீடியோவின் மூலம் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவருக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டது என்பது உறுதியாகியுள்ளது.

Related posts