எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சொத்தை அழித்தேனா?

மறைந்த சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண். இவரும் பின்னணி பாடல்கள் பாடி உள்ளார். சில படங்களில் நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். எஸ்.பி.பி.சரண் அளித்த பேட்டி வருமாறு:-

“சமுத்திரக்கனி சொன்ன கதை பிடித்து போய் உன்னை சரணடைந்தேன் படத்தை தயாரித்தேன். அதற்கு மாநில அரசு விருது கிடைத்தது. ஆனால் லாபம் வரவில்லை. தெலுங்கில் வந்த வர்ஷம் படத்தை தமிழில் அதிக பணம் செலவு செய்து மழை என்ற பெயரில் எடுத்தோம். அதில் மொத்த பணமும் போய்விட்டது. அப்போது அப்பா நஷ்டம் என்பது சாதாரணமானது, வருத்தப்படாதே என்றார்.

அதன்பிறகு வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 படத்தை எடுத்தேன். படம் வெற்றி பெற்றது. ஆனால் எதிர்பார்த்த பணம் வரவில்லை. தொடர்ந்து ஆரண்ய காண்டம் படம் தயாரித்தேன். அது தேசிய விருதுகள் பெற்றது. பெயர் புகழ் வந்தது. ஆனால் பணம் வரவில்லை. இதனால் மன அழுத்தமானேன்.

அப்பா கட்டிய கோதண்டபாணி ஸ்டூடியோவிலும் வேலைகள் நடக்கவில்லை. இதை பார்த்தவர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இத்தனை வருஷம் சம்பாதித்து வைத்த பணத்தையெல்லாம் பையன் வந்து அழித்து அவரை திவாலாக்கிவிட்டான். எல்லா பணமும் போய்விட்டது. மொத்த சொத்தும் கரைந்துவிட்டது. இனிமேல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவ்வளவுதான். எங்கு ஆரம்பித்தாரோ அங்கு கொண்டுவந்து பையன் அவரை நிறுத்தி விட்டான் என்று விமர்சித்து பேசினர். அதை கேட்டு மனது மிகவும் கஷ்டமானது. அப்பா, அம்மா ஆதரவாக இருந்தனர். மேடை கச்சேரிகள்தான் பொருளாதார ரீதியாக எங்களுக்கு உதவின.

இனிமேல் பாட முயற்சி செய்யலாமா என்று யோசித்தபோது கொரோனாவால் அப்பாவை இழந்து வாழ்க்கை மீண்டும் சீர்குலைந்து விட்டது. தெலுங்கில் டி.வி.யில் அப்பா தொகுத்து வழங்கிய பாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க என்னை அழைத்து உள்ளனர். அதில் ஈடுபட இருக்கிறேன். இனிமேல் எனது தந்தை குரலில் பாடவும் முடிவு செய்து இருக்கிறேன்.” இவ்வாறு எஸ்.பி.பி.சரண் கூறினார்.

Related posts