இளையராஜா பேட்டியைப் பகிர்ந்த ரஹ்மான்

இளையராஜா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியின் இணைப்பை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளது இசை ரசிகர்கள் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தனது ஸ்டுடியோவில் பத்திரிகையாளர்கள் சிலரை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஒரு பாடலை ஒருவர் எப்போது கேட்டாலும் அது சற்று முன் பூத்த பூ போல இருக்க வேண்டும். எப்போது கேட்டாலும் அது புதிது போல, புதிதாக மெட்டமைக்கப்பட்டது போல இருக்க வேண்டும். அப்படியான பாடல்களை நோக்கித்தான் நமது மனம் எப்போதும் செல்லும்.
இதனால்தான் பழைய பாடல்களை நாம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம். ஏனென்றால் அந்தப் பாடல்கள் இன்றும் புதுமையான தன்மையைப் பெற்றுள்ளன” என்று இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.
இளையராஜாவின் இந்தப் பேட்டியைப் பல இணையதளங்கள் செய்தியாகப் பதிவேற்றியிருந்தன. அப்படி ஒரு இணையதளத்தில் இந்தப் பேட்டி வந்திருந்த இணைப்பை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது பலருக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளது.
ரஹ்மானின் இந்த ட்வீட்டைப் பலரும் ரீட்வீட் செய்தனர். நடிகர் தனுஷும் இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்து, “இந்த ட்வீட்டும், அதில் என்ன இருக்கிறது என்பதையும் பாருங்கள். அவ்வளவுதான்” என்று குறிப்பிட்டுள்ளார். தான் இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகன் என்பதை தனுஷ் பல மேடைகளில் கூறியுள்ளது நினைவுகூரத்தக்கது.
இணையத்தில் ரஹ்மானா, ராஜாவா என்று அடிக்கடி விவாதம் செய்யும் பல ரசிகர்களும் இந்த ட்வீட்டைப் பற்றிப் பேசி வருகின்றனர்.

Related posts