கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கவுள்ள சர்தார்

சர்தார்’ படத்தின் படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னையில் தொடங்கவுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தாமதவதால், ‘சர்தார்’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் கார்த்தி. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது.தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்திருப்பதால் சென்னையில் ஜூலை 16-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்காக சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமான காட்சிகளை படமாக்கவுள்ளது படக்குழு.
கரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே படப்பிடிப்புக்குள் அனுமதி, படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் சமூக இடைவெளி – முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை படக்குழுவினர் விதித்துள்ளனர். தற்போது படக்குழுவினர் அனைவருமே கரோனா தடுப்பூசில் போட்டுவிட்டார்களா என்பதை உறுதி செய்யும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது.
ஸ்பை த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், எடிட்டராக ரூபன், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

Related posts