மதுப்பழக்கத்தை விட்டு ஒரு வருடம் ஆகிறது: சிம்பு

தான் மதுப்பழக்கத்தை விட்டு, சரியாக ஒரு வருடம் ஆகிறது என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பாடல் ரம்ஜான் அன்று வெளியாவதாக இருந்தது. ஆனால், வெங்கட் பிரபுவின் தாயார் மறைவால் ஒத்திவைக்கப்பட்டது. பின்பு, ஜூன் 21 அன்று முதல் பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு சொன்னபடியே நேற்று, ’மெஹரஸைலா’ என்கிற பாடல் வெளியானது.
மதன் கார்க்கி வரிகள் எழுதியிருக்கும் இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜாவும், பவதாரிணியும் பாடியுள்ளனர். இந்தப் பாடலின் வெளியீட்டை முன்னிட்டு ட்விட்டர் ஸ்பேசஸ் தளத்தில் படக்குழுவினர் கலந்துகொண்டு உரையாடினர்.
இதில் பேசிய நாயகன் சிம்பு, “சரியாக ஒரு வருடத்துக்கு முன், ஜூன் 21-ம் தேதி கடந்த ஆண்டு மதுப்பழக்கத்தை விட்டேன்” என்று கூறினார். மேலும் விளையாட்டாக, “வெங்கட் பிரபு, பிரேம்ஜி போன்ற நண்பர்கள் இருந்தும் ஒரு வருடமாக நான் மதுவைத் தொடவில்லை” என்று சிம்பு குறிப்பிட்டார்.
வித்தியாசமான ஒரு முயற்சியாக ‘மாநாடு’ படத்தை ரசிகர்கள் பாராட்டுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த சிம்பு, படத்தில் நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், எஸ். ஜே.சூர்யா இருவரையும் குறிப்பிட்டுப் பாராட்டினார்.சிம்புவை வாழ்த்திய எஸ்.ஜே.சூர்யா, இந்திய அளவில் பிரபல நட்சத்திரமாக உயரும் திறமை சிம்புவுக்கு இருக்கிறது என்றும், அதற்கான ஆரம்பக்கட்டமாக ‘மாநாடு’ அமையும் என்றும் கூறினார்.

Related posts