சிகிச்சைக்கு உதவிய நடிகர் சிரஞ்சீவி: நடிகர் பொன்னம்பலம் நன்றி

நடிகர் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி நிதியுதவி அளித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து பொன்னமபலம் காணொலி ஒன்றை வெளியிட்டார்.
சண்டைப் பயிற்சிக் கலைஞரும், பல திரைப்படங்களில் எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்தவருமான நடிகர் பொன்னம்பலம், கடந்த வருடம் சிறுநீரகக் கோளாறு காரணமாக பாதிப்படைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடிகர் கமல்ஹாசன் பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளுக்கு உதவியதோடு, பொன்னம்பலத்தின் குழந்தைகள் படிப்புச் செலவையும் ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில் நடிகர் பொன்னம்பலத்துக்கு சிறுநீரகம் அதிக பாதிப்படைந்ததால், அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதற்கு தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த நடிகர் சிரஞ்சீவி உதவியுள்ளார். இது குறித்து பொன்னம்பலம் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம். ஜெய் ஸ்ரீராம். ரொம்ப நன்றி அண்ணே. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு எனக்கு நீங்கள் அளித்த ரூ.2 லட்சம், மிகவும் உதவியாக இருந்தது. இந்த உதவியை உயிருள்ளவரை மறக்க மாட்டேன். அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் பெயரைக் கொண்ட ஆஞ்சநேயர் என்றும் உங்களை சிரஞ்சீவியாக வைத்திருப்பார். நன்றி அண்ணே” என்று பொன்னம்பலம் பேசியுள்ளார்.
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலா, கரோனா நெருக்கடி அறக்கட்டளை என்கிற அமைப்பை ஆரம்பித்து, கரோனா பிரச்சினையால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டிருக்கும் திரைக்கலைஞர்கள் பலருக்கும் நடிகர் சிரஞ்சீவி தொடர்ந்து உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts