இந்தியன் 2 படம் தாமதத்திற்கு லைக்கா நிறுவனமே காரணம்

இந்தியன் 2 படம் தாமதத்திற்கு லைக்கா நிறுவனமே காரணம் என இயக்குநர் சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்க்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்தியன் படத்தின் 2ம் பாகத்தை முடித்துக் கொடுக்காமல், இயக்குனர் சங்கர் பிற படங்களை இயக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரி, லைக்கா தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சங்கர் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி மனுவுக்கு பதிலளிக்குமாறு இயக்குனர் சங்கருக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கில் இயக்குனர் சங்கர் தற்போது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த பதில் மனுவில், பல உண்மைகளை மறைத்து லைக்கா நிறுவனம் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். முதலில் இந்த படத்தை தில்ராஜ் என்பவர் தயாரிக்க இருந்ததாகவும், அவரை சமாதானப்படுத்தி இந்த படத்தை தயாரிக்க லைக்கா நிறுவனம் முன்வந்ததாகவும் சங்கர் கூறியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியன்-2 படத்துக்கான முன்தயாரிப்பு பணிகள் துவங்கப்பட்டு, 2018 மே மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்கப்பட்ட முடிவு செய்யப்பட்டதாகவும், படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் பட்ஜெட் முடிவு செய்யப்பட்ட நிலையில், அதனை குறைக்க லைக்கா நிறுவனம் கேட்டுக்கொண்டதால் 250 கோடியாக பட்ஜெட்டை குறைத்ததாகவும் சங்கர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்தியதாக லைக்கா நிறுவனத்தின் மீது இயக்குனர் சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த படத்தை முதலில் திட்டமிட்டபடி தில்ராஜ் தயாரித்திருந்தால், படம் ஏற்கனவே வெளியாகியிருக்கும் என்றும் அரங்கம் அமைப்பது, நிதி ஒதுக்கீடு செய்வது, ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தாமதம் ஏற்பட்டதால், படப்பிடிப்பு தாமதமானதாக இயக்குனர் சங்கர் தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

இது தவிர நடிகர் கமலுக்கு ஏற்பட்ட மேக் அப் அலர்ஜியாலும் படப்பிடிப்பு தாமதமானதாக சங்கர் கூறியுள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தால் 3 பேர் உயிரிழந்தது, கொரோனா ஊரடங்கு, உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தாமதமான போதும், அதன் பிறகு தயாரிப்பு பணியை தொடர்ந்து நடத்த லைக்கா நிறுவனம் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை, எனவே படம் தாமதமானதால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு தான் பொறுப்பல்ல என்று இயக்குனர் சங்கர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் வரும் ஜூன் முதல் படப்பிடிப்பை துவங்க தயாராக இருப்பதாகவும், அதை கருத்தில் கொள்ளாமல் தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் லைக்கா நிறுவனம் தன் மீது தொடர்ந்திருக்கும் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related posts