கேவி ஆனந்த் மறைவுக்கு இயக்குநர் ஷங்கர் இரங்கல்

இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்தின் மறைவால் தனது இதயம் கனக்கிறது என்று இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.
பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று (ஏப்.30) அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். நள்ளிரவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், தானே காரை ஓட்டிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்பு அதிகாலை 3 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கே.வி.ஆனந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அவரது மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகத்தினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் ஷங்கருக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் கே.வி.ஆனந்த். ’முதல்வன்’, ’பாய்ஸ்’, ’சிவாஜி’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருந்தார்.
கே.வி.ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் இயக்குநர் ஷங்கர், “பேரதிர்ச்சி அடைந்திருக்கிறேன். என் இதயம் கனக்கிறது. வலிக்கிறது. என்னால் இதை ஏற்க முடியவில்லை. அன்பு நண்பரை இழந்துவிட்டேன். கேவி ஒரு அற்புதமான ஒளிப்பதிவாளர், அட்டகாசமான இயக்குநர். இந்த இழப்பை ஈடு செய்யவே முடியாது. உங்கள் இழப்பை உணர்வேன் அன்பு நண்பா. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.

Related posts