கரோனா வார்டிலேயே நடைபெற்ற திருமணம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மணமகனைத் திருமணம் செய்ய, மணமகள் முழுக்கவச உடையில் வந்தது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் சரத் மோன். 28 வயதான இவர், கத்தாரில் பணியாற்றி வந்தார். இவருக்கும் ஆலப்புழாவைச் சேர்ந்த அபிராமி என்னும் பெண்ணுக்கும் பல மாதங்களுக்கு முன்பே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கரோனா பெருந்தொற்றால் சரத்தால் தாய்நாடு திரும்ப முடியவில்லை.
இதற்கிடையே கடந்த மாதம் ஆலப்புழா வந்தார் சரத். இருவருக்கும் ஏப்ரல் 25-ம் தேதி திருமணம் என்று முடிவானது. எதிர்பாராத விதமாக, சரத் மோனும் அவருடைய தாய் ஜிஜி மோளும் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இருவரும் ஏப்ரல் 21-ம் தேதி ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தொற்றால் திருமணம் தள்ளிப்போகக் கூடாது, நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணம் நடைபெற வேண்டும் என்று இரு வீட்டாரும் ஆசைப்பட்டனர். அனைவரிடமும் கலந்து பேசி மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், கரோனா வார்டிலேயே திருமணத்தை நடத்த அனுமதியைப் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து பிபிஇ எனப்படும் முழுக்கவச உடையணிந்து நேற்று மருத்துவமனை வந்தார் அபிராமி. தாய் ஜிஜி மோள் மாலை எடுத்துக் கொடுக்க, அபிராமிக்கும், சரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கரோனா வார்டில் இருந்த நோயாளிகளுக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் இனிப்பு வழங்கினார் அபிராமி.
கரோனா இரண்டாவது அலைக்கு நடுவே தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மணமகனைத் திருமணம் செய்ய, மணமகள் முழுக்கவச உடை அணிந்து வந்தது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Related posts