ஆட்டோ ஓட்டிய பெண்ணுக்கு கார் வாங்கி கொடுத்த நடிகை சமந்தா

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

பிரதியுக்‌ஷா என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து ஏழை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கல்வி, மருத்துவம் சம்பந்தமான உதவிகளை வழங்கி சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அவர் கூறும்போது, “எனக்கு சிறுவயதில் இருந்தே சமூக சேவையில் ஆர்வம் உண்டு. தற்போது பிரபல நடிகையாக உயர்ந்து இருக்கிறேன். இந்த நிலைக்கு என்னை உயர்த்திய சமூகத்துக்கு பிரதிபலனாக உதவத்தான் தொண்டு நிறுவனம் தொடங்கி இருக்கிறேன்” என்றார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சமந்தா பங்கேற்றபோது ஒரு பெண் ஆட்டோ ஓட்டுனரும் கலந்து கொண்டார். அந்த பெண் பேசும்போது, “எனது பெற்றோர் மறைவுக்கு பிறகு எனது 7 சகோதரிகளை ஆட்டோ ஓட்டி காப்பாற்றி வருகிறேன்” என்றார். அதை கேட்ட சமந்தா கலங்கினார்.

உடனடியாக ரூ.12.5 லட்சம் மதிப்புள்ள புதிய காரை வாங்கி அந்த பெண்ணுக்கு வழங்கி வாடகைக்கு அந்த காரை ஓட்டி பிழைத்துக்கொள்ளும்படி கூறினார். சமந்தாவின் உதவியை கேள்விப்பட்டு ரசிகர்கள் பலர் வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Related posts