சினிமாவில் நடிப்பது ஏன்?’’ வீரப்பன் மகள் விளக்கம்

சந்தன மர கடத்தல் மன்னன் வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி, ‘மாவீரன் பிள்ளை’ என்ற படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார்.
சினிமாவில் நடிக்க வந்தது பற்றி அவர் கூறும்போது,
‘‘விவசாயிகள் மற்றும் மது ஒழிப்பு போராட்டங்கள் பற்றிய படம் என்பதால் நடிக்க சம்மதித்தேன். படப்பிடிப்பு தர்மபுரி மாவட்டத்தின் பல இடங்களிலும், டெல்லியிலும் நடந்தது. திரையுலகுக்கு வந்ததற்காக எனக்கு என் கணவர் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். நான் கவர்ச்சியாகவோ, ஆபாசமாகவோ நடிக்க மாட்டேன். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்’’ என்றார்.
வீரப்பன் பற்றி பேசும்போது, ‘‘என் அப்பாவை நல்லவரா, கெட்டவரா? என்று கேட்கிறார்கள். என்னைப் பொருத்தவரை அவர் நல்லவர்தான். அப்பா வாழ்ந்த காட்டுக்குள் புதையல் இருக்கிறது. ஆனால் அது எங்கே இருக்கிறது என்று எங்களுக்கு தெரியாது’’ என்கிறார்.
‘மாவீரன் பிள்ளை’ படத்தில், ராதாரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தை தயாரித்து இயக்கி நடிப்பவர், ராஜா.

Related posts