வித்தியாசமான வேடம் அமைவது அதிர்ஷ்டம் நடிகை ராஷி கன்னா

தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தவர் ராஷி கன்னா. ஜெயம் ரவி ஜோடியாக அடங்க மறு, விஷால் ஜோடியாக அயோக்யா, விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் மேலும் 3 படங்களில் நடித்து வருகிறார். ராஷி கன்னா அளித்த பேட்டி வருமாறு:
“எல்லோரும் விதியை நம்புவார்கள். நானும் அந்த தலையெழுத்தைத்தான் நம்புகிறேன். ஆனால் எனது தலையெழுத்தை இயக்குனர்கள்தான் எழுதுகிறார்கள். நமக்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்றால் எழுதி வைத்திருக்க வேண்டும் என்று சொல்வது சினிமா நடிகர், நடிகைகள் விஷயத்தில் 100 சதவீதம் சரியானது. என்ன எழுதி வைத்து இருக்கிறதோ அதுதான் நடக்கும். எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் இருக்கிறது. ஆனால் அந்த மாதிரி வேடங்கள் கிடைக்க அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். இயக்குனர்கள் எழுதி வைத்து இருந்தால்தான் எனக்கு அந்த மாதிரி சிறந்த வாய்ப்புகள் வரும். கதாநாயகியாக எங்களுடைய சினிமா வாழ்க்கை எங்கள் கையில் இருக்காது. இயக்குனர்கள் கையில்தான் இருக்கும். அவர்கள் மிக சிறந்த கதாபாத்திரங்களை உருவாக்காவிட்டால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. 100 படங்கள் வந்தால் அதில் ஒன்றிரண்டு படங்களில்தான் கதாநாயகிக்கு பெயர் கிடைக்கிற கதாபாத்திரங்கள் அமையும். அந்த மாதிரி கதாபாத்திரங்களுக்காக காத்திருப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.’’
இவ்வாறு ராஷி கன்னா கூறினார்.

Related posts