‘த்ரிஷ்யம் 2’ படத்துக்கு மாபெரும் வரவேற்பு

‘த்ரிஷ்யம் 2’ படத்துக்குக் கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு குறித்து மோகன்லால் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘த்ரிஷ்யம் 2’. திரையரங்க வெளியீட்டைத் தவிர்த்து அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 19-ம் தேதி வெளியானது. ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் என்பதால், அதன் 2-ம் பாகத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
முதல் பாகத்தின் முடிவிலிருந்து, 2-ம் பாகத்தைத் தொடங்கியிருந்தார் இயக்குநர் ஜீத்து ஜோசப். ‘த்ரிஷ்யம் 2’ படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளத்தில் பலரும் படத்தின் கதை, திரைக்கதை குறித்துச் சிலிர்ப்புடன் பகிர்ந்து வருகிறார்கள்.
‘த்ரிஷ்யம் 2’ படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு குறித்து மோகன்லால் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
“‘த்ரிஷ்யம் 2’ படத்துக்குக் கிடைத்துள்ள அதீத வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. படம் பார்த்த அனைவரும் மெசேஜ் மற்றும் கால்களின் மூலமாகப் பாராட்டி வருவதைக் கண்டு நெகிழ்கிறேன். நல்ல படத்தை உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் எப்போதும் பாராட்டி ஆதரிப்பார்கள் என்பதற்கு ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் வெற்றியே சாட்சி.
சினிமாவை விரும்பும் மக்கள் தொடர்ந்து தரும் அன்பும் ஆதரவுமே நாங்கள் எங்களை மேம்படுத்த ஊக்கமளிக்கிறது. உங்கள் அனைவரது அன்புக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். இது ‘த்ரிஷ்யம்’ குழுவினர் ஒரு மிகப்பெரிய விஷயம். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும், என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் ‘த்ரிஷ்யம் 2’ பார்த்து ரசிக்க வழிசெய்த அமேசான் ப்ரைமுக்கு நான் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்”
இவ்வாறு மோகன்லால் தெரிவித்துள்ளார்.

Related posts