வெற்றிமாறன் பேட்டி !

தான் இயக்கி வரும் படத்தில் கதையின் நாயகனாக சூரியும், கதாநாயகனாக விஜய் சேதுபதியும் நடித்து வருவதாக வெற்றிமாறன் தெரிவித்தார்.
சென்னை கோடம்பாக்கத்தில் புதிய ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார் இளையராஜா. அதில் தனது படத்தின் பணிகளை இன்று (பிப்ரவரி 3) முதல் தொடங்கினார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி – விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் பாடல் ரெக்கார்டிங் பணிகளைத் தொடங்கியுள்ளார் இளையராஜா.
இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நேரில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் விஜய் சேதுபதி பேசும்போது, “எங்க வீட்டுக்குப் பக்கத்தில் ஒருவரைக் கூட்டிக்கொண்டு வந்தாச்சு. நான் இளையராஜா சாருடைய பெரிய ரசிகன். அவருடைய ஸ்டுடியோ தொடங்கும் நாளில் நான் வருவேன் என்பது நினைத்துக் கூடப் பார்க்காதது.
சூரி நாயகனாக நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பது பெரிய சந்தோஷம். எங்களுடைய படத்தின் பாடல்கள் உருவாக்கம் இங்கு தொடங்கப்பட்டுள்ளது. வெற்றி சாரோடு பணிபுரிய வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை. என் வாழ்க்கையில், வரலாற்றில் இந்த நாள் முக்கியமான நாள். நான் இங்கு இருக்கிறேன் என்பது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது” என்று தெரிவித்தார்.
வெற்றிமாறன் பேசும்போது, “என்னுடைய தலைமுறையினர் இளையராஜா சாருடைய இசையைக் கேட்டுத்தான் வளர்ந்திருக்கிறோம். இசை என்றாலே சினிமா இசைதான். சினிமா இசை என்றாலே இளையராஜா சாருடைய இசைதான். ஒவ்வொரு படத்துக்கான பாடல்கள் உருவாக்கத்தின்போதும், அவருடைய பாடல்களை முன்வைத்துதான் பேசிக் கொண்டிருப்போம்.
இளையராஜா சாருடன் பணிபுரிவது, இந்தப் படத்தில் அமைந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அவருடைய புதிய ஸ்டுடியோவில் எங்களுடைய படத்தின் முதல் பாடல் ரெக்கார்டிங் நடக்கிறது என்பது கூடுதல் சந்தோஷம். இதுவொரு நல்ல தொடக்கமாகத் தோன்றுகிறது. அவருடைய இசை உருவாக்கத்தைப் பார்ப்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது.
முதற்கட்டப் படப்பிடிப்பு முடித்துள்ளோம். படத்தின் கதை நாயகன் சூரிதான், கதாநாயகன் விஜய் சேதுபதி. சூரியின் மீதுதான் முழுக் கதையும் நடக்கும். அந்தக் கதையில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்” என்று வெற்றிமாறன் தெரிவித்தார்.

Related posts