கர்ணன்’ திரைப்பட தலைப்பை மீண்டும் பயன்படுத்தக்கூடாது

கர்ணன்’ திரைப்பட தலைப்பை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்று நடிகர் தனுஷுக்கு சிவாஜி சமூக நலப்பேரவை கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரியேறும் பெருமாள் வெற்றிக்கு பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிவரும் திரைப்படம் கர்ணன். இதில் நடிகர் தனுஷ் நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்திற்குக் கர்ணன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன், யோகி பாபு, மலையாள நடிகர் லால், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் கர்ணன்’ திரைப்பட தலைப்பை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என நடிகர் தனுஷூக்கு சிவாஜி நலப்பேரவை கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சிவாஜி நலப் பேரவையின் தலைவர் சந்திரசேகரன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கர்ணன் என்று சொன்னதும் நடிகர் திலகம் நடித்த திரைப்படம் தான் நினைவுக்கு வரும். சட்டப்படி ஏற்கனவே வெளிவந்த படத்தின் பெயரை வைக்கலாம் என்றாலும், நியாயப்படி அதை தவிர்ப்பது நல்லது.

“கர்ணன்” என்றாலே கொடுப்பவன். கொடைவள்ளல்தான். உங்கள் படத்தில் உரிமைக்காகப் போராடும் ஒருவன். அதனால் ஒரு சமூகத் திரைப்படத்திற்கு “கர்ணன்” என்று பெயரிட்டு அதில் தாங்கள் நடிப்பது ஏற்கத்தக்கதல்ல. இது சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாபாரதத்தை நேசிக்கும் கோடிக்கணக்கானவர்களின் மனதையும் புண்படுத்தக்கூடும். எனவே படத்தின் தலைப்பை மாற்றுமாறு கோரிக்கை வைக்கிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts