மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிகில் படத்துக்குப் பிறகு விஜய் மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசை – அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 14 மாலை 6 மணிக்கு மாஸ்டர் பட டீசர் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையை மாஸ்டர் பட டீசர் பெற்றுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேடர்ஸ் தகவல் தெரிவித்தது.

சமீபகாலமாக ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், சூர்யா நடித்த சூரரைப் போற்று, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின. இதனால் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியானது.

ஆனால் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதை மறுத்தார். கடந்த செப்டம்பர் மாதம், கோவையில் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறும் போது

மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாவதற்கு வாய்ப்பு இல்லை. திரையரங்கில் தான் வெளியாகும். திரையரங்குகள் என்றைக்கும் திறக்கப்படுகிறதோ அதன்பிறகு மாஸ்டர் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார்.

கடந்த 10-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டன. தீபாவளிக்கு சந்தானம் நடித்த பிஸ்கோத் படம் திரையரங்கில் வெளியானது.

மக்களிடம் கொரோனா குறித்த அச்சம் இன்னும் நிலவுவதால் திரையரங்குகளுக்கு வரத் தயங்குகிறார்கள். திரையரங்குகளிலும் 50 சதவீத இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தீபாவளி சமயத்தில் ஓடிடி தளங்களில் வெளியான சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு தந்துள்ளார்கள்.

இந்தக் காரணங்களை முன்வைத்து மாஸ்டர் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. பெரிய தொகைக்கு டிஜிட்டல் உரிமையை விற்றுள்ளதால் வரும் பொங்கலுக்கு நெட்பிளிக்ஸ் தளத்தில் மாஸ்டர் படம் வெளியிடப்படுவதாகப் புதிய தகவல் ஒன்று வெளியானது. இதனால் சமூகவலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் மற்றொரு தகவலும் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் உரிமை மட்டுமே விற்கப்பட்டுள்ளது. திரையரங்கில் வெளியான பிறகே ஓடிடி தளத்தில் மாஸ்டர் படம் வெளியிடப்படும். எனினும் ஜனவரியிலும் தற்போதைய நிலைமை நீடித்தால் மட்டுமே ஓடிடி தளத்தில் மாஸ்டர் படத்தை நேரடியாக வெளியிடப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என செய்தி வெளியானது. இதனால் எந்தச் செய்தியை நம்புவது என்கிற குழப்பத்தில் உள்ளார்கள் ரசிகர்கள்.

மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாவது குறித்த தனது இறுதி முடிவை தயாரிப்பாளர் முறையாக அறிவிக்கவேண்டும் என ரசிகர்கள் விரும்பினார்கள் அதன் படி மாஸ்டர்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியிடுவதில் உறுதி என தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மிகப்பெரிய நாள் விரைவில் வரும் என நாங்களும் காத்திருக்கிறோம். ஓ.டி.டி. தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும், தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம்.ரசிகர்களும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் காணவே விரும்புகின்றனர் .வதந்திகளை நம்ப வேண்டாம், விரைவில் நல்ல தகவல் வரும் என கூறப்பட்டு உள்ளது.

Related posts