சிவாஜியை கடித்த பாம்பு இறந்தது

பாம்பு கடிக்கு இலக்கான வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஆபத்தான கட்டத்தைக் கடந்து சாதாரண நிலைக்கு வந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று முன்தினம் இரவு வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து வீடு செல்வதற்காக அலுவலகத்தின் கதவை அவர் மூடியபோது அதிலிருந்த பாம்பு ஒன்று கையில் தீண்டியது.
ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த சிவாஜிலிங்கம் தற்போது சாதாரண நிலைக்கு வந்துள்ளார்.
இதேவேளை, அவருக்குக் கடித்த பாம்பைப் போத்தல் ஒன்றில் அடைத்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அது உயிரிழந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
——
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை கொழும்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2015 ஆம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திட்டத்தின் மூலம் நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

—–

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை​ முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இராஜினாமா செய்துள்ளார்.
கட்சியின் புதிய பதவிகள் தொடர்பில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

——

நாட்டில் தற்பொழுது நிலவும் சூழலுக்கு மத்தியில் அனர்த்தம் அதிகளவில் உள்ள கிழக்கு மாகாண 5 பாடசாலைகள், வடமேல் மாகாணத்தில், குருநாகல் மாவட்டத்தில் சில பாடசாலைகள், சப்ரகமுவ மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள சில பாடசாலைகள் தவிர்ந்த சுமார் 5,100 பாடசாலைகளில் இன்று (23 ஆம் திகதி) முதல் தரம் 6 தொடக்கம் 13 வரையிலான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அனைத்து மாகாண வலய மற்றும் கோட்டக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக கல்வி அமைச்சினால் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள 15 / 2020 என்ற சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டி ஆலோசனைகளை உள்ளடக்கிய வகையில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

விசேடமாக இதில் குறிப்பிடப்பட்ட வகையில் சுகாதார மேம்பாட்டு குழுவை முன்னிலைப்படுத்தி மிகவும் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொண்டு பாடசாலைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை 500 இற்கும் குறைவான பாடசாலைகள் 77.3 சதவீதமாகும். 501 தொடக்கம் 1000 வரையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 13.6 சதவீதமாகும்.

இதற்கமைவாக மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கையில் 91 சதவீதம். 1000 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலையாகும் என்றும் செயலாளர் கூறினார்.

இதனால் சமூக இடைவெளி உள்ளிட்ட ஏனைய சுகாதார முறைகளைக் கடைப்பிடித்து பாடசாலைகளை முன்னெடுப்பதில் நடைமுறையில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு சுகாதார நடைமுறைகளை முன்னெடுப்பதற்காக நிதி உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கமைவாக 105.812 பில்லியன் ரூபாவை பாடசாலைகளுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.

Related posts