யாழ் மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்!

முடக்கல் நிலை நீக்கப்பட்டாலும் அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியமாகும் என யாழ் மாவட்ட அரச அதிபரும் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவருமான க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டிருந்த மூன்று கிராமங்கள் இன்று (11) காலையிலிருந்து முடக்கல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

எனினும் குறித்த பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியினை கடைப்பிடித்து தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்தல் அவசியமாகும்.

மேல் மாகாணம் மற்றும் ஏனைய மாவட்டங்களில் கொரோனா தொற்று வலுவடைந்து வரும் நிலை காணப்படுகின்றது. அந்த நிலையில் தற்பொழுது யாழ்மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக சுகாதாரப் பிரிவினரால் முடக்கப்பட்ட பிரதேசங்கள் முடக்க நிலைலிருந்து இன்று விடுவிக்கப்பட்டாலும் கிருமி தொற்று அச்சம் தொடர்ந்து காணப்படுகின்றது.

எனவே அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்றுவதன் மூலமே அப்பகுதியிலோ அல்லது வேறு பகுதிகளில் குறித்த தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்க முடியும்.

அத்துடன் முடக்க நிலையிலிருந்து விடுபட்ட கிராமங்களுக்கு மேல் மாகாணம் அல்லது ஏற்கனவே கொரோனா பாதிப்புள்ள அபாய வலயங்களிலிருந்து புதியவர்கள் யாரும் வந்தால் அவர்கள் கட்டாயமாக சுகாதாரப் பிரிவினரிடம் பதிவுகளை மேற் கொள்ள வேண்டும்எனவும் தெரிவித்தார் .

Related posts