இந்த ஆண்டு தீபாவளி வெளியீட்டுக்கு 3 படங்கள் உறுதி

இந்த ஆண்டு தீபாவளி வெளியீட்டுக்கு 3 படங்கள் உறுதியாகியுள்ளன.
கரோனா அச்சுறுத்தலால் 150 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கோடை விடுமுறை தொடங்கி எந்தவொரு படமும் வெளியாகவில்லை. தயாரிப்பாளர்களுக்குக் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறப்புக்கு மத்திய அரசு அனுமதியளித்துவிட்டாலும், தமிழகத்தில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
அக்டோபர் 22-ம் தேதி திரையரங்குகள் திறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, அடுத்த மாதம் வரவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படங்கள் வெளியீட்டில் போட்டி தொடங்கியுள்ளது.
முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர் மகன்’, ஜீவா, அருள்நிதி நடித்துள்ள ‘களத்தில் சந்திப்போம்’ மற்றும் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி, நடித்துள்ள ‘இரண்டாம் குத்து’ ஆகிய படங்கள் தங்களது வெளியீட்டை உறுதி செய்துள்ளன.
திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் ஒரு சீட் விட்டு ஒரு சீட் தான் அமர வைக்க வேண்டும் எனப் பல்வேறு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியிடத் தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

Related posts