சிம்பு – சுசீந்திரன் படப்பிடிப்பில் கடும் கட்டுப்பாடுகள்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
‘மாநாடு’ படத்துக்கு முன்னதாக சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிம்பு. இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 8-ம் தேதி முதல் சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வழங்க சுசீந்திரன் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார். சிம்புவுடன் பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக நடிக்க நிதி அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக திரு பணிபுரிந்து வருகிறார்.
சிம்பு நீண்ட நாட்களாக உடல் எடையைக் குறைத்து வருகிறார். சுமார் 20 கிலோவுக்கும் அதிகமாக எடை குறைத்து, மிகவும் ஸ்லிம்மாகிவிட்டார். ஆனால், சிம்புவின் சமீபத்திய புகைப்படம் எதுவுமே இணையத்தில் வெளியாகவில்லை. படங்கள் எதுவுமே வெளியாகாத வகையில் சிம்புவும் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
சுசீந்திரன் படப்பிடிப்புத் தளத்தில் யாருக்குமே மொபைல் போன் அனுமதி கிடையாது. மேலும், சிம்புவின் எந்தவொரு சின்ன புகைப்படம் கூட வெளியாகாத வகையில் கட்டுப்பாடுகளுடன் பணிபுரிய சுசீந்திரன் படக்குழு முடிவு செய்துள்ளது.
சுசீந்திரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் போதுதான், சிம்புவின் உடல் எடை குறைந்த படம் வெளியாகும் எனத் தெரிகிறது. அதேபோல், சிம்பு ரசிகர்கள் மத்தியில் யாருமே படப்பிடிப்புக்குத் தளத்துக்கு வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts