என்னுடைய தோற்றம் குறித்துக் கவலைப்பட்டேன்

என்னுடைய தோற்றம் குறித்து நான் எப்போதும் கவலைப்பட்டுள்ளேன் என்று இலியானா தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்த இலியானா, தற்போது இந்திப் படங்களில் முழுமையாகக் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அபிஷேக் பச்சனுடன் இணைந்து ‘தி பிக் ஃபுல்’ என்ற இந்திப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இதனிடையே, சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“என்னுடைய தோற்றம் குறித்து நான் கவலைப்பட்டுள்ளேன். என்னுடைய அகலமான இடை குறித்தும், தளர்வான தொடைகள் குறித்தும், போதிய அளவு குறுகலாக இல்லாத விலா குறித்தும், வயிறு போதுமான அளவு தட்டையாக இல்லையென்றும், மூக்கு நேராக இல்லையென்றும், உதடுகள் முழுமையானதாக இல்லையென்றும் கவலைப்பட்டேன்.
நான் போதுமான உயரம் இல்லையென்றும், எனக்குப் போதுமான அழகு இல்லையென்றும், போதுமான புத்திசாலித்தனம் இல்லையென்றும், போதுமான அளவு கச்சிதமாக இல்லையென்றும் கவலைப்பட்டிருக்கிறேன்.
நான் கச்சிதமாக இருக்கவேண்டியதில்லை என்பதை உணராமல் இருந்திருக்கிறேன். நான் என் குறைகளுடன் அழகாக இருக்க வேண்டியவள். வித்தியாசமான, தனித்துவமான பெண்ணாக இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு தழும்பும், வீக்கங்களும், ஒவ்வொரு குறையும் என்னை உருவாக்கின. எனக்கே எனக்கான அழகை உருவாக்கின.
உலகம் அழகு என்று எதை முடிவு செய்து வைத்துள்ளதோ அதற்குள் என்னைப் பொருத்திக் கொள்வதை நிறுத்தினேன். அதற்குள் எப்படியாவது பொருந்திப் போக வேண்டும் என்று அரும்பாடுபடுவதை நிறுத்தினேன். நான் தனித்துவமாக இருக்கப் பிறந்திருக்கும்போது, ஏன் அப்படிப் பொருந்த வேண்டும்?”
இவ்வாறு இலியானா தெரிவித்துள்ளார்.

Related posts