தென்கொரியாவிடம் மன்னிப்புக் கேட்ட கிம்

கொரியக் கடற்பகுதியில் தென்கொரியர் ஒருவர் தவறுதலாக கொல்லப்பட்டதற்கு வடகொரிய அதிபர் கிம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இதுகுறித்து தென்கொரிய அலுவலகம் தரப்பில், “தென்கொரியாவைச் சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கரோனா எச்சரிக்கை நடவடிக்கையாக வடகொரியாவால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் உடல் கடலில் எரிந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு வடகொரியா அதிபர் கிம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது எதிர்பாராத மற்றும் அவமானகரமான நிகழ்வு என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வடகொரியாவால் கொல்லப்பட்ட நபர் சமீபகாலமாக நிதி நெருக்கடியில் தவித்த நபர் என்று தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகொரியாவின் எல்லைப்பகுதி நகரான கேசாங்கில் கரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைத்தும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் இந்த ஊரடங்கை கிம் நீக்கி இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
மேலும், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் எல்லை மூடலை வடகொரியா தொடரும் என்றும், பிற நாடுகளின் உதவி இதில் தேவை இல்லை என்றும் வடகொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், கரோனா பரவலைத் தடுக்க அதிபர் கிம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts