எஸ்பிபி நலமாக இருக்கிறார் என்று சொல்லமுடியாது கமல்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்பிபியை நேரில் சென்று பார்த்த நடிகர் கமல்ஹாசன், அவர் நலமாக இருக்கிறார் என்று கூறமுடியாது என்று வேதனை தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது உடல்நிலை குறித்து அவர் அப்போது காணொலியாக வெளியிட்டார். ஆரம்பத்தில் சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
அவர் பூரண உடல்நலம் பெற தமிழகம் முழுவதும் பிரார்த்தனை நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, சிறிது சிறிதாக அவரது உடல்நிலை சகஜ நிலைக்குத் திரும்பியது. வாய் வழியாக உணவு உட்கொள்ளும் அளவுக்கு அவருடைய உடல்நிலை தேறியது. இதனால், திரையுலகினர், ரசிகர்கள் அனைவருமே மகிழ்ச்சியடைந்தார்கள்.
எஸ்பிபி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென்று இன்று (செப்டம்பர் 24) அவருடைய உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியானது. எக்மோ உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் எஸ்பிபி சிகிச்சையில் உள்ள நிலையில், அவரது உடல்நிலை மிகவும், கவலைக்கிடமாக உள்ளதாக எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எஸ்பிபியின் உடல்நலன் பற்றித் தகவலறிந்து அவரது நெருங்கிய நண்பர் கமல்ஹாசன் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கிருந்த எஸ்பிபியின் மகன் சரண், உறவினர்கள், மருத்துவர்களிடம் எஸ்பிபியின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.
பின்னர் வெளியில் வந்த கமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ”எஸ்பிபி உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உறவுகள் கடவுளைப் பிரார்த்திக்கின்றனர். அவர் நலமாக இருக்கிறார் என்று சொல்லமுடியாது” என்று கவலை தோய்ந்த முகத்துடன் சொல்லிவிட்டுச் சென்றார்.
எஸ்.பி.பி., உடல்நிலை தேறி வந்த நிலையில், 24 மணி நேரத்தில் மோசமடைந்துள்ளதாக, எம்.ஜி.எம்., மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts