ஓ.டி.டி. தளத்தில் வெளியிட படங்கள் வரிசை கட்டி வருகின்றன..!

தியேட்டர்களை திறக்க தாமதம் ஆவதால, ஓ.டி.டி. தளத்தில் வெளியிட படங்கள் வரிசை கட்டி வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 5 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் புதிய படங்கள் இணைய தளமான ஓ.டி.டி.யில் வெளியாகின்றன. ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி, வைபவ் நடித்துள்ள லாக்கப் உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டியில் வந்தன. சூர்யாவின் சூரரை போற்று அக்டோபர் மாதம் 30-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.

தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம், விஜய்சேதுபதியின் ரணசிங்கம், சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா, அரவிந்த சாமி, திரிஷா நடித்துள்ள சதுரங்க வேட்டை2 ஆகிய படங்களையும் ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. இந்த நிலையில் மேலும் 10-க்கும் மேற்பட்ட படங்களை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சு வார்த்தைகள் நடப்பதாகவும் இந்த பட்டியலில் விஷால் நடித்துள்ள சக்ரா, சந்தானத்தின் பிஸ்கோத்தே, கீர்த்தி சுரேசின் குட்லக் சகி, ஐஸ்வர்யா ராஜேசின் பூமிகா ஆகிய முக்கிய படங்களும் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

கார்த்தியின் சுல்தான் படத்தையும் ஓ.டி.டி. தளத்துக்கு கொண்டுவரப்போவதாக இணைய தளங்களில் தகவல் பரவின. இதற்கு பதில் அளித்துள்ள படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு படத்தின் 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. படம் ரிலீஸ் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார். படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட தியேட்டர் அதிபர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Related posts