அரசியலமைப்பு சீர்த்திருத்தம் செப்டெம்பர் மாதத்தில் முன்னெடுக்கப்படும்

நாட்டிற்கு நேயமுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

உத்தேச அரசியலமைப்பை செப்டெம்பர் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இதேவேளை அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்திலுள்ள பொருத்தமற்ற விடயங்களை திருத்தியமைத்து 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தார்.

19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நீக்குவதற்காக புதிய 20ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் முழுமையான அரசியலமைப்பு மறுசீரமைப்பொன்றை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

20ஆவது திருத்தச்சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்குத் தேவையான திட்டமிடல்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இத் திருத்தச் சட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்வதற்கான செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

19ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள நாட்டுக்குப் பாதகமான அனைத்து சரத்துகளும் நீக்கப்படவுள்ளதுடன், நாட்டின் சுயாதீனத்தை வலுப்படுத்தும் வகையிலான சரத்துகளும் இணைக்கப்படவுள்ளன. 20ஆவது திருத்தச்சட்டத்தை குறுகிய காலத்துக்குள் நடைமுறைக்கு கொண்டுவருவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

20ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் 5ஆண்டுகளுக்குள் மட்டுப்படுத்துவது தொடர்பிலான குறைப்பாடுகளை நிவர்த்தி செய்தல், சுயாதீன ஆணைக்குழுக்கள் இயங்குவதிலுள்ள சிக்கல் நிலைகளை தகர்த்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து அரசாங்கம் ஆழமாக அவதானம் செலுத்தியுள்ளது.

19ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக மறுசீரமைப்பதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் புதிய அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக் ஷ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

—-

அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்களை முழுமையாக நீக்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி கடும் எதிர்ப்பை வெளியிடும் என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் 28 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் மலையக தமிழருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 1977 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரை அமைச்சரவையில் மலையக தமிழருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. இம்முறை அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.

அதேபோல் புத்தசாசனத்துக்கு தனி அமைச்சொன்று இருக்கும் நிலையில், ஏனைய மதங்களுக்கான அமைச்சுகள் நீக்கப்பட்டு சமய விவகார அமைச்சென உருவாக்கப்பட்டு அவை சார்ந்த திணைக்களங்கள் பிரதமரின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலைமை எதிர்காலத்தில் மாற்றப்படவேண்டும். அத்துடன் சில அமைச்சுகள் பொருத்தமற்ற விதத்தில் வழங்கப்பட்டுள்ளன.

19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் என அரச தரப்பில் கூறப்படுகின்றது. அதனை முழுமையாக நீக்குவதற்கு இடமளிக்கமாட்டோம். வேண்டுமானால் திருத்தங்களை மேற்கொள்ளலாம். 13 ஆவது திருத்தச்சட்டமானது சிறுபான்மையின மக்களுக்காக உருவானது. அதில் கைவைத்தால் கடும் எதிர்ப்பை வெளியிடுவோம்.

தமிழ் முற்போக்கு கூட்டணியாக சில விட்டுக்கொடுப்புகளை செய்து பயணித்ததாலேயே 100 வீத வெற்றி கிடைத்தது.வருகின்ற தேர்தல்களிலும் முற்போக்கு கூட்டணியாகவே முடிவுகளை எடுப்போம். எதிரணியில் இருந்தாலும் எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் அதற்கு எதிராகவும் நீதிக்காகவும் உரத்து குரல் எழுப்புவோம் என்றார்.

-மலையக நிருபர் கிரிஷாந்தன்-

Related posts