எம்.ஜி.ஆர். சிலை மீது காவித் துண்டு

புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடைபெறும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி வில்லியனூர் விழுப்புரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை மீது, நேற்று அடையாளம் தெரியாத நபர் சிலர் காவித் துண்டு அணிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அதிமுக வை சேர்ந்த தொண்டர்கள் அந்த இடத்தில் முற்றுகையிட்டனர். மேலும் எம்.ஜி.ஆர். சிலை மீது காவித் துண்டு போர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தை முன்னிட்டு பாதுகாப்புக்காக காவல்துறையின் அங்கு குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்த அதிமுகவை சேர்ந்த தொண்டர்கள் எம்.ஜி.ஆர். சிலை மீது இருந்த காவித் துண்டை அகற்றி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்ததற்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது புதுவை முதல்வர் உரிய நடவடிக்கை வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும், யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related posts