அமைச்சுப் பதவி எனும் எண்ணமோ கொள்கையோ TNAயிடம் இல்லை

புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையே இல்லையென்றும் தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி குறித்து பேச வேண்டிய அவசியமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த 09ஆம் திகதி வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்றில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது, அரசியல் தீர்வு கிடைக்க எவ்வளவு காலம் எடுக்குமென கூற முடியாதென்றும் அந்த இடைப்பட்ட காலத்தில் தமது பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்வது அத்தியாவசிய தேவை என்றும் தெரிவித்திருந்தார்.

அத்தோடு, புதிய ஆட்சியில் அமைச்சரவையில் சேர்வதாக இருந்தாலும் எந்த அமைச்சுக்கள், எத்தனை அமைச்சுக்கள், எவ்விதமான அதிகாரங்கள் என்பவற்றைப் பேரம் பேச தமக்குப் பலம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சுப் பதவி தொடர்பான சுமந்திரனின் இந்தக் கருத்து அரசியல் மட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அத்தோடு, இந்தக் கருத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கட்சிகள் கண்டனங்களையும் தெரிவித்திருந்தன.

இந்த நிலையிலேயே, புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே தம்மிடம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Related posts