அந்நிய சக்திகளிடம் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது

அந்நிய சக்திகளிடம் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் மே 15 ந்தேதி இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வந்தது. இருநாடுகளும் வீரர்களையும், படைகளையும் குவித்து வந்தன. இந்நிலையில் ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தொடர் பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன. இந்நிலையில் எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீர் என பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை லடாக் சென்றுள்ளார். அவருடன் தலைமை தளபதி பிபன் ராவத்தும் உடன்சென்றார்.

அங்கு பிரதமர் மோடி ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றி அவர்களை உற்சாகமூட்டினார். இதையடுத்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராணுவ வீரர்களையும் பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர்களிடையே பேசிய பிரதமர் அந்நிய சக்திகளிடம் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது. அனைவரும் விரைவில் நலம்பெற விரும்புகிறேன் என்று தெரிவித்தார். இந்திய வீரர்களின் தைரியத்தை உலகமே உற்று நோக்குவதாகவும் ராணுவ வீரர்கள் சிந்திய ரத்தம் இளைஞர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts