மரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன்

மரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன் என திருமணம் குறித்து வனிதா விஜயகுமார் கூறி உள்ளார்.

கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த வனிதா விஜயகுமார் நேற்று பீட்டர் பால் என்பவரை மணமுடித்துக் கொண்டார். திருமணம் முடிந்த முதல்நாளன்றே பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை தன் கணவர் திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையாக விவாகரத்து அளித்த பிறகே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறியதாகவும், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்ததாகவும் எலிசபெத் ஹெலன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

எலிசபெத் ஹெலனின் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளதாக வனிதா தெரிவித்திருக்கும் நிலையில், அவரது திருமணம் குறித்த விமர்சனங்கள் சமூகவலைதளத்தில் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதுகுறித்து வனிதா விஜயகுமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உலகம் முழுவதுமிலிருந்து வரும் உங்கள் அனைவரின் அன்பு, ஆசிர்வாதம் மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

நான் எனது கடந்தகாலத்தில் நிறைய எதிர்மறை விஷயங்கள் மற்றும் மோசமான காலகட்டத்தைத் தாண்டி வந்திருக்கிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனது இரண்டு இளம் குழந்தைகளுடன் நீண்ட நாட்கள் தனியான போராட்டத்துக்குப் பிறகு, ஒரு வழியாக நான் எனது உண்மையான காதலையும், மகிழ்ச்சியையும் வாழ்க்கையில் கண்டறிந்திருக்கிறேன்.

பீட்டர் பால் கனிவான, அன்பான, நேர்மையான மனிதர். கடவுளின், எனது அன்பார்ந்தவர்களின் ஆசி இல்லாமல் ஒரு உறவில் இணைய நான் விரும்பவில்லை.

திருமணம் என்பது இரண்டு இதயங்களின், உண்மையான உணர்வுகளின், நிபந்தனையற்ற காதலின் சங்கமம். எனது பெயரைக் கெடுக்கவும், அவதூறு பரப்பவும், என்னிடமிருந்து பணத்தைக் கறைக்கவும் நினைப்பவர்கள், சுத்தமாக அக்கறையில்லாதவர்கள் வன்மத்தை உருவாக்க முயல்கின்றனர்.

நான் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 7 வருடங்களாகப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த, அக்கறை செலுத்த யாரும் இல்லாத ஒரு மனிதரை நான் சந்தித்தேன். அவர் திடீரென ஊடக வெளிச்சத்தில் இருப்பதாலும், அவர் பெயர் பலருக்குத் தெரிந்திருப்பதாலும், (விஷமிகள்) அதை தங்கள் சுயநலத்துக்காகத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். நான் யாருடைய குடும்பத்தையும் பிரிக்கவில்லை. அப்படிச் செய்யும் எண்ணமும் இல்லை.

பீட்டர் பாலும், நானும், கடவுள் முன்னிலையில் ஒன்று சேர்ந்துள்ளோம். ஆனால், நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறவில்லை என்றால், அந்த எண்ணமும் இல்லையென்றால், நாங்கள் எங்கள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் பைத்தியக்காரத்தனமாகக் காதலித்ததைத் தவிர வேறெந்த குற்றத்தையும் செய்யவில்லை.,

நாங்கள் இருவரும் சேர்ந்து மிகச் சந்தோஷமாக இருக்கிறோம். என்றும் இப்படி இருப்போம் நான் புனித பைபிளின் மீது செய்த சத்தியத்தின் பேரில், அவர் உடல்நிலை சரியில்லாதபோதும், ஆரோக்கியமாக இருக்கும்போதும், செல்வம் இருக்கும்போதும், இல்லாத நிலையிலும், அவருக்குத் துணை நிற்பேன். அன்பு செலுத்துவேன். மரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன்.

தயவுசெய்து எந்த பொய்க் குற்றச்சாட்டுகளையும் நம்பாதீர்கள். இதுவும் கடந்து போகும்”.இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Related posts