அறம் படத்தின் 2-ம் பாகத்தில் கீர்த்தி சுரேஷ்?

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து 2017-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அறம்.

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து 2017-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அறம். ஆழ்துழை கிணற்றில் விழுந்த ஒரு குழந்தையை காப்பாற்ற போராடும் கலெக்டரையும் அரசியல்வாதிகளின் தவறுகளையும் சுற்றி கதை பின்னப்பட்டு இருந்தது. நயன்தாரா கலெக்டராக நடித்து இருந்தார். அவரது கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏற்கனவே வெற்றி பெற்ற பல படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதிலும் நயன்தாராவே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்து இருப்பதால் கால்ஷீட் ஒதுக்குவதில் சிக்கல் உள்ளது.

எனவே நயன்தாராவுக்கு பதில் சமந்தாவை யோசித்தனர். தற்போது கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க திட்டமிட்டு அவரிடம் பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் சமீபத்தில் இணைய தளத்தில் வெளியானது. இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. ஆனாலும் காணாமல் போன குழந்தையை தேடும் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்த கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.

ஏற்கனவே மறைந்த நடிகை சாவித்திரியாக நடிகையர் திலகம் படத்திலும் நடித்து திறமையை நிரூபித்து இருந்தார். எனவே அறம் 2-ம் பாகத்துக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Related posts